Wednesday, April 13, 2016

2016 - தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்


பரிச்சயமான ஒரு பாரதியார் பாடல்





20-01-2016 தேதியிட்ட ஆனந்த விகடன் தலையங்கத்தில் "சமூக பேரிழிவு" என்ற தலைப்பில் படித்து தெரிந்து கொண்டேன், தன் இறுதி சடங்கை செய்வதற்காக சுடுகாட்டிற்கு வழி கேட்ட அந்த முதியவர் ஒருவரின் உடலுக்கு சாதியின் பேரில் நேர்ந்த கொடுமையை, இது நடந்தேறிய இடம் திரு நாள் கொண்டச்சேரி, நாகப்பட்டினம் மாவட்டம்.

2016 இல் நம் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக நாம் செய்யவேண்டிய பணி நிறைய உள்ளது என்ற சிந்தனையில் தான் நாம் எல்லோரும் இந்த ஆண்டை தொடங்கினோம். ஆனால், மேற்குறிப்பிட்டது போல் மனதை பாதிக்கும் மனிதத்தன்மையற்ற செயல்  நம் ஊரில் அடிக்கடி அரங்கேறி பல அவலங்களுக்கு ஆதாரமாய் நிற்கும் போது மனம் அதை ஏற்க மறுப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு வேலை உணவை கூட எடுக்க கை தடுமாறுகிறது. இந்த சாதி எனும் கொடுஞ்செயலை அழித்தெறிய ஒரு வழியை தேடி தவிக்கும் பல குரல்களின் தொகுப்பாக தான் இதை இங்கு சமர்பிக்கிறேன்.

தேடுகிறேன்
தேடுகிறேன் உன்னை; ஆமாம் எங்கள் உள்ளம் படும் இந்த வேதனையை உருவாக்கியவன் அல்லவா நீ; உன்னை பார்த்து எங்கள் கேள்விக்கு பதில்  கேட்கவேண்டும்.

எங்கள் உடம்பில் ஓடும் இரத்தத் அணுக்களில் உள்ள நிறத்திலும் வேற்றுமை இல்லை, அதன் வேகத்திலும் வேற்றுமை இல்லை; இதயததுடிப்பின் எண்ணிகைகள் கூட சரியாகத்தான் உள்ளது. இப்படி பல, எங்களுடைய கண், கை, கால் போன்ற எல்லா உறுப்புகளிலும் ஒற்றுமையை தந்துவிட்டு எங்கிருந்து கண்டு பிடித்து கொண்டு வந்தாய், எங்களை பிரிப்பதற்காக இந்த சாதி எனும் உறுப்பை.

உடனே, எங்கள் உடம்பில், கட்டாயமாக செய்யவேண்டும் ஒரு அறுவை சிகிச்சை. இது சாதி எனும் உறுப்பை அறுத்தெரிய மட்டும் அல்ல; அந்த சாதி எங்கள் மனதில் உண்டாக்கிய புற்றுநோயிலிருந்து எழுந்து, விழிப்புற்று வாழ்வதற்கும்.

ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது எனும் பழமொழியை எனக்கு உணரவைத்த தருணம் ஒன்று. ஆம், நாம் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது நன்கு பரிச்சயமான ஒரு பாரதியார் பாடல்;

“சாதிகள் இல்லையடி பாப்பா”

இதை படித்த அனைவரும் இங்கு அரங்கேற்றும் செய்வது இதற்கு முற்றிலும் முரண்படான செயலை தான். ஆம், எங்கு பார்த்தாலும் சாதியின் அடிப்படையில், அதை பின்பற்றிய சடங்குகள், நம் சமூகத்தில் மட்டும் தான் இப்படி நடக்கிறதா என்றாள் இல்லை, இதை நமக்கு கற்றுக்கொடுத்த பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வீட்டிலும், நம் உறவினர்கள் வீட்டிலும், ஏன் நம் தாய் தந்தை மனத்திலும் கூட இதே செயல் தான் நடைமுறையில் உள்ளது.

இறுதியில் நாம் கற்றது ஒன்று தான்; இங்கு அனைவரும் படிப்பது ஒன்று செய்வது வேறொன்று.

இந்த முரண்பாடான செயல்களை சமுதாயத்தில் படரவிட்ட கயவனை கண்டுபிடிக்க வேண்டியே தேடுகிறேன் என்ற தலைப்பில் எழுத தொடங்கினேன். ஆனால் மேற்கண்ட இதிலிருந்து ஒரு செய்தி மட்டும் தெளிவாகவே புரிகிறது, அவன் கிடைத்தாலும் இந்த கேள்விக்கு சரியான பதிலை கொடுக்கமுடியாது, அப்படி பதில் கிடைத்தாலும் அதை வைத்து கொண்டு இங்கு நடக்கும் அவலங்களுக்கு நம்மால் முற்றிலும் தீர்வு காணமுடியாது.

இருந்தாலும் பரவாயில்லை தேடுகிறேன் தலைப்பிலேயே தொடருகிறேன்.  ஏனெனில், இங்கு எனது தேடல் முழுவதும் பலகோடி மக்களின் மனதிலும், வாழ்விலும் சங்கடங்களை தோற்றுவித்த இந்த சாதியை முற்றிலும் அழிக்கும் வழியை தேடியே...!!!

***************

உயர்வான உயரம்

மனிதனே நீ எப்போது உயர்வாய் என்று தெரியுமா;
என்றாவது எண்ணி பார்த்ததுண்டா?

உன் பெற்றோர் கொடுத்த பிறப்பினாலா? இல்லை

உனக்கு சர்க்கார் கொடுத்த சான்றிதழின் பேரிலா? இல்லவே இல்லை!!!

ஒரு நாள், உனக்கு இந்த சமுதாயம் ஒரு பெரிய வெகுமதியை கொடுக்கும். ஆனால் அதை உன்னால் ஒரே நாளில் பெறமுடியாது, உன் செயலுக்காகவும், உன் குணதிர்காகவும் இந்த வெகுமதி உன்னை தேடியே வரும்.

அதை பெற்றதில் பெருமிதம் கொள்ளாமல், மக்கள் உனக்கு கொடுத்த இந்த வெகுமதியை,

"நான்கு திசைகளிலும் இருந்து வரும் காற்றிடம், எப்படி  ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியை பாதுகாப்பாயோ, அதைப்போல உன் வாழ்நாள் முழுவதும் நீ பாதுகாக்க வேண்டும்"

அப்போது தான் நீ உயர்ந்தவனாவாய்.

உன் இறப்பிற்கு பிறகும்கூட அழியா புகழுடன் நீ உயர்ந்துகொண்டே இருப்பாய். அதன் பிறகு உன்னுடைய இந்த உயரத்தை பாதுகாக்க யாரும் மதில் சுவர்கூட அமைக்க தேவையில்லை, மதம் கொண்ட யானைகள் மட்டும் அல்ல, மதம் பிடித்த மனிதப் படைகளும்கூட உன் புகழ் பாட தொடங்கிவிடும்.

உயர பறந்திடுவோம் உச்சியை தொடுவதற்கு அல்ல
நம் உயரத்தை வளர்த்திட.

இதுவே உயரம்
உண்மையான உயர்வான உயரம்.
***************

நட்பு எனும் வாள்(ழ்)

இருளை போக்க அதிகாலையில் உதயமாகும் சூரிய ஒளியை போல இந்த சாதி எனும் சொல்லை களைத்தெறிய, அதன் உணர்ச்சிகளை செயலிழக்க செய்ய, மற்றும் நம் சமுதாயத்தில் இந்த சாதி உண்டாக்கிய பெரும் தழும்புகளை அடியோடு மறைய செய்வதற்குகாகவே ஒரு வழியை தேடி கண்டு பிடித்து விட்டது எனது மனம்.

பீறிட்டு தெறிக்கும் இந்த சாதி எனும் எரிமலையின் தீக்குழம்பைவிட மிக வெப்பமானது இது...!!!

சாதி எனும் பூதத்தை கொன்று, களைத்து, மறைய வைக்கும் திறமை கொண்ட தீ இது...!!!
சாதி எனும் விசப்பாம்பு கடித்த மிருகங்களை மனிதனாக்கும் மகத்துவம்  தெரிந்த மருத்துவம் இது...!!!

வீரபாண்டிய கட்டபொம்மன் கையில் இருக்கும் வாளை ஒத்த கூர்மையுடையது...!!!
உலகில் உள்ள எல்லா உறவுகளும்;

சாதி எனும் கருவேலம் மரத்திற்கு நீர் பாய்ச்சிய போது, அதை வேரோடு வெட்டி வீழ்த்தும் வல்லமை கொண்ட வீர வாள் இது...!!!

சாதி எனும் இரண்டு எழுத்தை மூழ்கி சாகடிக்க வந்த மூன்றெழுத்து உறவு தான் இது...!!!

“நட்பு   நட்பு   நட்பு”

நம் சமுதாயத்தில் நட்புக்கும் பஞ்சம் இல்லை,
நண்பர்களுக்கும் பஞ்சம் இல்லை. 

இனியும் தேவையா?

சாதியின் பேரில் ஒரு சமூக பேரிழிவு?

விழித்துக் கொள்ளவேண்டிய நேரம் இது...!!!

நட்பு எனும் வாள்(ழ்) எடுத்து அழித்திடுவோம், இந்த சாதி எனும் சொல்லை மனதில் இருந்து மட்டும் அல்ல; பாதியில் புகுத்தப்பட்ட நம் தமிழ் அகராதியில் கூட இனி தேவை இல்லை...!!!
**************

நட்புடன்
தி.வி. சதிஸ் சுந்தர்


Total Pageviews